25வது சலங்கை பரதவிழா 2025

பத்திரிகைச் செய்தி
10-03-2025

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 25வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா

தாயகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் அறப்பணிக்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 25வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 09.03.2025 அன்று Aulnay Sous Bois நகரசபையின் உள்ளரங்க மண்டபத்தில் மதியம் 1:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

அரங்க வாசலின் வரவேற்பு நிறைகுட விளக்குகளை திரு. திருமதி. சுஜீவன் விமலாம்பிகை தம்பதியினர் இணைந்து ஏற்றி வைத்தனர். பிரதான பொதுச்சுடரினை டென்மார்க் தமிழர் புனர்வாழ்வுக் கழக முன்னாள் பணிப்பாளரும் சமூகசேவையாளருமான திரு. கனகரத்தினம் ஆனந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவீரர்களையும், போரினாலும், இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும் மற்றும் மறைந்த அனைத்து மனிதநேய செயற்பாட்டாளர்களையும், காலம்சென்ற சமூகசேவையாளர் « ஈழத்தமிழ்விழி » அமரர். அரியரட்ணம் அவர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது ,

அரங்கின் மங்கள விளக்குகளை தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள், தமிழ்ச்சங்க பிரதிநிதிகள் மற்றும் நடன ஆசிரியர்கள் இணைந்து ஏற்றி வைத்தனர்.

அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் கரவொலியுடன் பிரான்சில் புகழ்பூத்த 32 நடன ஆசிரியர்களின், 350க்கு மேற்பட்ட நடன மாணவ மாணவிகளின் 38 நடன வடிவங்கள் மேடையேற்றப்பட்டன. அனைத்து நடன மாணவ மாணவிகளும் ஒருவர்க்கு ஒருவர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி குருவிற்கும், தமை ஈன்ற பெற்றோர்க்கும், தமிழினத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

பரதவிழா இங்கு வாழும் எமது இளையோரின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே, பரதவிழாவினூடாக எமது தாயக உறவுகள் பயன்பெறுகின்றார்கள். அந்த பெருமையெல்லாம் நடன ஆசிரியர்களையும் , மாணவர்களையும் , பெற்றோரையும், வருகைதந்த மக்களையும், வர்த்தக ஆதரவாளர்களையும், தமிழர் புனர்வாழ்வுக் கழக தொண்டர்களையுமே சாரும்.

நகரசபை உறுப்பினர்கள், நாடு கடந்த தமிழீழ அரசின் துணைப் பிரதமர், தேசிய செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், தமிழ்ச் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், சோதியா கலைக்கல்லூரி நிர்வாகி, சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் நடன மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

இவ்வெள்ளிவிழா நிகழ்வில் அணைத்து நடன ஆசிரியர்களும் தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்களால் மாண்பேற்றப்பட்டனர்.

இந்நிகழ்விற்கான ஒலி அமைப்பினை அருள் சொனோ திரு. அருளானந்தன், தொழில்நுட்ப உதவி திரு. ரவிகாந்த், ஒளி அமைப்பினை திரு. கரிகாலன் ஆகியோர் வழங்க, ஆவணப் படப்பிடிப்பு மற்றும் புகைப் படப் பிடிப்பினை துலபன் 5G Entertainment நிறுவனமும், புகைப் படப் பிடிப்பினை திரு. மணிவண்ணன் மற்றும் Frédéric Bidinger அவர்களும் பதிவுசெய்தனர். பார ஊர்திக்கான உதவியினை திரு. ரவிகாந்த் அவர்கள் வழங்கியிருந்தார். மேடை அலங்காரத்தினை கரிகாலன் மற்றும் லிங்கம் அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வினை திரு. விநாயகமூர்த்தி, திரு. அருள்மொழித்தேவன், திருமதி. சுபாஷினி, செல்வி. துளசி, திரு. சுதர்சன் மற்றும் சத்தியா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

அரங்கம் நிறைந்த மக்களுடன் இப்பரதவிழா இரவு 10:30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்

1 réflexion sur “25வது சலங்கை பரதவிழா 2025”

Laisser un commentaire

Votre adresse e-mail ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

Retour en haut